Friday, March 30, 2018

சில நேரங்களில் சில மனிதர்கள்

ஒரு துன்பத்திலிருந்து மீண்டு எழும்போது மறு துன்பம் அழுத்தினால் அகம் புழுங்கித் தவியாய் தவிக்கும். ஒரு கதாசிரியராக இருந்தால் எழுதிச் செல்வார். ஓவியராக இருந்தால் படமாய் காட்சிப்படுத்தியிருப்பார். அதுவே ஒரு சாமானிய அதிலும் ஒரு பெண்ணாக இருந்தால் அழுதுதானே ஆற்றுப்படுத்துவாள். அப்படியாகத்தான் இங்கே கங்கா கட்டமைக்கப்படுகிறாள்.

ஆர்.கே.வி எனும் எழுத்தாள கதாபாத்திரத்தின் வாயிலாக ஜெயகாந்தன் பிம்பம் முழுக்க முழுக்க அப்படியே தெரிகிறது. கங்கா, கனகா(கங்காவின் அம்மா), வெங்கி மாமா(கனகாவின் அண்ணன்), கணேசன்(கங்காவின் அண்ணன்), பிரபு, மஞ்சு(பிரபுவின் மகள்), மற்றும் கதாசிரியர் ஆர்.கே.வி. எனும் பாத்திரங்களைச் சுற்றியே இந்நாவல் முழுவதும் பின்னப்பட்டுள்ளது.

ஆர்.கே.வியின் கதையினூடாக கங்கா தனக்கான வாழ்வைத் தேடிச் செல்கிறாள். மழை நாளொன்றில் காரில் லிப்ட் கேட்டுச் செல்லும் அப்பெண் அவனால் சிதைக்கப்படுகிறாள். அவன் யார்? எந்த ஊர்? என எதுவும் அவளுக்குத் தெரியாது. அதை அறிந்துகொள்ளும் மன நிலையிலும் அவள் இல்லை. இந்த உண்மைகளை அவள் தன் தாயிடம் சொல்ல அது பெரும் பிரச்சினையாக வெடிக்க, அவள் அண்ணன் அவளையும் அம்மாவையும் வீட்டை விட்டு துரத்த, அவளை அவளது மாமா வந்து அழைத்துச் சென்று படிக்க வைத்து உதியோகத்துக்குச் செல்லவும் உதவுகிறார். பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு அவள் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை தேடிச் செல்வதும், அவனுக்கென ஒரு குடும்பம் இருப்பதையும் அவள் அறிகிறாள். அதன் பிறகு அக்கதை கங்காவின் போக்கிலேயே நகர்கிறது.

எழுபதுகளில் ஒரு பெண்ணின் அகமனப் போராட்டங்களை, அது எழுப்பும் வினாக்களுக்கான பதில்களையும் கங்கா, கனகா, மஞ்சு மூலமாக அக்ரஹாரத்தின் மொழியில் சொல்லியிருக்கிறார். அக்கினிப் பிரவேசம் கதையிலிருந்துதான் இக்கதை துவங்குகிறது. ஜெயகாந்தன் விமரிசனங்களுக்கு உட்படும் விதமாகவே எழுத்துலகில் இருந்திருக்கிறார். யாரும் தொடாத விடையங்களையே கருவாக படைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

சில நேரங்களில் சில மனிதர்கள் எப்போதும் புரிந்துகொள்ளப்படாத மனிதர்களின் அகம் மற்றும் புற மனப் போராட்டங்களின் வாழ்வு பற்றியே பேசுகிறது. நிராகரிப்பின் வலிகள் அவை.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:13
தலைப்பு: சில நேரங்களில் சில மனிதர்கள் - நாவல்
ஆசிரியர்: ஜெயகாந்தன்
வெளியீடு: மீனாட்சி புத்தக நிலையம்
மொத்தப் பக்கம்: 412

Tuesday, March 27, 2018

அபாய நகரம்-ராணி காமிக்ஸ்


1990 களில் யாழ் அச்சுவேலி மஹாவித்தியாலையம் பள்ளிக்கு எதிரே உள்ள ஒரு புத்தகக் கடையில் (கடையின் பெயர் நினைவில் இல்லை) சொல்லி வைத்து மாதம் தவறாது வாங்கி வந்து பாட நூல்களுக்கு முன்னமே வாசித்து முடித்துவிடுவேன். அம்புலி மாமா, ராணி காமிக்ஸ் போன்றவைகள் என் வாசிப்பை வளப்படுத்தியவை என்பேன். ஏனெனில் எனது ஏழாவது வயதில் எனது அப்பப்பாவிற்கு (அப்பாவின் தந்தை) மகாபாரதம், இராமாயணம் போன்றவற்றை தினமும் மாலையில் அவர் வீட்டுக்கு சென்று வாசித்துக் காட்டுவேன். எனக்கு புத்தகங்களின் மீதான ஈர்ப்புக்கு அடிகோலியதும் அவரேதான். அவர் ஒரு தீவிர பெரியாரிஸ்ட் என்பது எனக்கு பின்னாளில்தான் வாசிப்புகளினூடாக தெரிய வந்தது.

இன்று காலையில் நண்பன் சரோகராஜ் இந்த காமிக்ஸ் புத்தகத்தின் லிங்(கொக்கி) அனுப்பி என் பழைய நினைவுகளை கிளர்த்திவிட்டார். படுக்கையை விட்டு எழும்பி பல் துலக்குவதற்கிடையில் இந்த காமிக்ஸை ஒரு சிறுவனைப் போல் வாசித்து முடித்தேன். மீண்டும் ஒரு சிறுவனாக என்னை உணர்ந்தேன் இன்று.

1996 களில் ஏதிலிகளாக அறந்தாங்கி அழியாநிலை முகாமில் இருந்தபோது முகாம் நூலகத்தில் நண்பன் சரோகராஜுடன் போட்டி போட்டு வாசித்தும், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி முகாமில் இருந்தபோது ஒரு கடையில் நிறைய காமிக்ஸ் வாங்கியதும் இன்றும் பசுமையாக இருக்கிறது நினைவடுக்குகளில்.

அபாய நகரம் கதை என்னவென்றால் முகமூடி வீரர் மாயாவி ரெக்ஸ் எனும் பன்னிரண்டு வயது சிறுவனை பாரோகான் நாட்டின் இளவரசனாக ஆக்கி, சதிகாரன் பகத்தூரை சிறையிட்டு, அரசரை விடுதலை செய்து, அந்நாட்டின் அடிமைகளை விடுதலை செய்வது. அதற்கிடையில் நிகழும் அவரது சாகசங்களை நீங்கள் வாசித்தால்தான் உணர முடியும். வாசித்து உணர்ந்து கொள்ளுங்கள்.

முகமூடி வீரர் மாயாவி, இரும்புகை வீரர் மாயாவி, கரும்புலி மில்லர், விக்ரமாதித்தனின் வேதாளம் போன்ற காமிக்ஸ்கள் என்றும் காலத்தால் அழிக்கமுடியாதவைகள்.

மூன்று ரூபாய் புத்தகத்தை பதினைந்து ரூபாய்க்கு அச்சுவேலியில் அன்றைக்கு வாங்கும்போது ஏன் இவ்வளவு அதிகம் வச்சு விற்கிறீர்கள் என்ற கேள்விக்கான விடையை  பின்னாளில் வாசிப்புகளே கொடுத்தது. வாசிப்போம்! வாசிப்பை நேசிப்போம்!!

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:15
தலைப்பு: அபாய நகரம்-காமிக்ஸ்
வெளியீடு: ராணி
மொத்தப் பக்கம்: 60

Monday, March 26, 2018

அகதிகள் வீடடைதல்!



புழுதிகள் அடங்கி வெப்பம் தணியும்
கோடையின் இரவுகளைத்தான்
வரவேற்று மகிழ்கிறோம்...
தார் சீற்றின் கீழே
அடுப்பின் வெக்கைக்குள்
கருப்பானதாகவும், இழுப்பு வந்ததாகவும்
அம்மாவோ, அக்காவோ, மனைவியோ
ஏன் பெண் துணையில்லாத ஆணோ
பேசியதை நீங்கள் கேட்டதுண்டா?
இதோ மரத்தினடியில்தான் கோடையின் பகல்கள்
சீட்டாட்டமாகவும், கேரம் விளையாட்டோடும்...
ஊர் பேச்சோடு நகரும் சூரியனை
நீங்கள் பார்த்ததுண்டா?
இதற்காகவே நாங்கள் மரங்களை வளர்த்தோம்
உங்களுக்கு அவர்களோடு உறவாடத் தெரியாது
கால் நூற்றாண்டு அகதி வாழ்வில்
ஆஸ்பெட்டாஷ் சீற்றுக்கு மாறியிருக்கிறோம்
என்றால் உங்களால் நம்பவே முடியாதுதான்.
பத்துக்குப் பத்து எனும் கணித சூத்திரத்தை
யார் கண்டு பிடித்தது?
ஏன் இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்
எங்கள் கல்லறையின் அளவை?
அந்திக் கருக்கலில் விடைபெற்றுச் செல்லும்
சூரியனைப் போல் மெல்ல விடை பெறுகிறோம்
மரங்களை விட்டு...
வீடுகளுக்குள் வெளிச்சம் பரவுகிறது...
உங்களுக்குத் தெரியுமா?
மண்ணெண்ணைக் குப்பி விளக்கிலிருந்து
குண்டு பல்புக்கு மாறிவிட்டோம் என்பது?
புழுக்கத்தின் நாற்றம் மிகக் கொடியது...
சவங்களைக்கூட இரவுகளில்
அடக்கம் செய்யவே விரும்புகிறோம்...
கொஞ்சம் குளிர் மெல்லப் பரவுகிறது...
போர்த்தி உறங்குவதற்குள் விடியல் துவங்கிவிடுகிறது.
மீண்டும் மரங்கொளோடு உறவாடுதலும்
அகதிகள் வீடடைவதும் தொடர் கதையாகிறது.
சொல்ல மறந்துவிட்டேன் கோடையிலும்
அதிகாரத்தின் அடக்குமுறைக்கு ஓய்வில்லை.

சுகன்யா ஞானசூரி

ஃபாரென்ஹீட் 451



நீரின் கொதிநிலை, உறைநிலை பற்றி நமக்கு தெரிந்ததுதான். ஆனால் இது தாள்களின் எரிநிலை பற்றிய நாவல். விஞ்ஞான ரீதியிலான புனைவிலக்கிய வகையைச் சேர்ந்தது. வாசிக்கும்போது கவிதையா உரைநடையா எனும் கேள்வி எழுவது தவிர்க்க இயலாத ஒன்று. அவ்வளவு நேர்த்தியாக செதுக்கியுள்ளார் 

ஒரு பெயரில்லாத ஊரில் அல்லது நகரத்தில் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் கை மோண்டாக் கதையின் நாயகன். இங்கே தீயை அணைப்பதற்கு பதிலாக சிந்தனைகளை தூண்டும், மதக் கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும் நூல்களை, தடை செய்யப்பட்ட புத்தகங்களை தேடித்தேடி மிகவும் விரும்பி ரசித்து எரிக்கும் தீயணைப்பு இல்லை தீமூட்டும் ஊழியானக வருகிறான். மோண்டாக்கின் மனைவியாக மில்லி எனும் மில்ட்ரெட் சுவர்த் தொலைக்காட்சிகளுக்குள் கேளிக்கை விரும்பியாக வருகிறாள்.

க்ளாரி மெக்லானான் எனும் சிறுமியின் நீங்கள் சந்தோசமாக இருக்கிறீர்களா? போன்ற கேள்விகளிலிருந்து கொஞ்சம் தன்னை கேள்விக்குள்ளாக்கும் கதையின் நாயகன் ஒரு பெண்ணை நூல்களோடு தீயிட்டு எரிக்கும் சம்பவத்திற்கு (அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கிய எழுத்தாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இந்த இடத்தில் என் நினைவில் எழுகிறது) பிறகு நூல்களின் மீதான பற்றுதல் பற்றிப் படரச் செய்கிறது அங்கிருந்து களவாய் எடுத்துவந்த புத்தகம்.

கேப்டன் பியாட்டி அதிகாரத்தின் கொடுங்கரங்கள். பியாட்டியின் எந்திர நாய் மிகவும் பொல்லாதது. கேளிக்கைகளில் மக்களை காலம் களிக்கச் செய்யும் தோரணை, மக்களுக்கு தொலைக்காட்சி மீது (இங்கு 2009 ல் ஈழத்தின் இறுதி யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தபோது மானாட மயிலாட நிகழ்ச்சிகளுக்குள் மக்களை கட்டி வைத்தது நினைவில் எழுகிறது) கவனக் குவிப்பைச் செய்யும் அதிகாரத்தின் மொத்த உருவம் பியாட்டி.

நூல்கள் மீதான ஈர்ப்பு, ஃபேபர் போன்றவர்களுடனான சந்திப்பு, உரையாடல் எல்லாம் கதையின் நாயகனின் வீட்டை எரிக்கும் பொறுப்பை பியாட்டி கொடுக்கும் தருணங்களில் அரசுக்கு, அதிகாரத்துக்கு எதிரானவனாக மாறுகிறான். பிறகு நதியின் போக்கில் சென்று காடுகளுக்குள் அறிவுசார் பெருமக்களோடு வாழ்தல், அந்த அறிவுசார் மக்களும் முன்னர் அரசால் துரத்தப்பட்டவர்களே.

கற்பனை என்பது எல்லையற்றது. ஆனால் அது மனித சமூகத்தை சிந்திக்க விடாமல் செய்யும் விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளும்(தொலைக்காட்சி), கேளிக்கைகளும் மனித சமூகத்தை அழித்துவிடும் எனும் தத்துவத்தை திறம்பட செய்திருக்கிறது. எழுத்துகள் எப்போதும் தொலைநோக்கோடு எழுதப்பட வேண்டும். அப்போதுதான் அவை காலத்துக்கும் நீடித்து நிற்கும். அன்றைக்கு இந்த நூல் எதார்த்தத்தை மீறிய புனைவாக இருப்பினும் இன்றைக்கு அதுதான் எதார்த்தமாக உள்ளது.

இன்று நல்ல நூல்களை தேர்ந்து வாசிக்கும் பழக்கம் நம்மிடம் அருகி வருவதை கண்கூடாக காண்கிறோம். தொலைக்காட்சிகளும், செல்போன்களும் வாசிப்பை அருகச் செய்தவைகளில் மிக முக்கியமானவை என்றால் மிகையில்லை.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:14
தலைப்பு: ஃபாரென்ஹீட் 451
ஆசிரியர்: ரே பிராட்பரி(தமிழில்: வெ. ஸ்ரீராம்)
வெளியீடு: க்ரியா
மொத்தப் பக்கம்: 200
விலை: ₹180

Monday, March 19, 2018

வேங்கையின் மைந்தன்

மும்முடிச் சோழன், கங்கைகொண்ட சோழபுரத்தை கட்டுவித்த மாமன்னன் இராஜேந்திர சோழர் காலத்தில் நிகழும் வாழ்வின் நிலைகளை, செப்பேடுகள், கல்வெட்டுக்கள், களநிலவரங்கள் ஆகியவற்றின் துணையோடு கற்பனைப் பறவையின் சிறகுகளை தாராளமாய் பறக்க விட்டிருக்கிறார் ஆசிரியர் அகிலன்.

கொடும்பாளூர் இளவரசர் இளங்கோவேள் இங்கு கதையின் நாயகனாக வலம் வந்தாலும், தன்னடக்கத்தோடு இராஜேந்திர சோழரையே முதன்மைப்படுத்தி நிற்கிறார். ஈழத்திலிருந்து பாண்டியர்களின் மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் இழந்த மணிமுடியை ரோகணத்து இளவரசி ரோகினியின் துணையோடு மீட்டு வருவதும், ரோகிணி மீதான காதலும், பின்நாளில் நிகழும் ஆபத்துகளும், பாண்டியர்கள், மேலை சாளுக்கியர்கள், போன்றவர்களின் சூழ்ச்சிகள் என விறுவிறுப்பாக செல்கிறது.

இங்கும் பொன்னியின் செல்வரோடு பயணித்த வந்தியத்தேவன் வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் இளங்கோவோடு திரிகிறார்.

வீரமல்லன் எனும் நட்பின் பகைமையும், மல்லன் மாறன் எனும் நட்பின் தியாகமும் இருவேறு துருவங்களாக நிற்கின்றன.

அருண்மொழி இராஜேந்திரரின் புதல்வி அப்படியே பொன்னியின் செல்வனின் குந்தவைப் பிராட்டியை நினைவில் கொண்டுவருகிறார். இளங்கோவின் முறைப் பெண்.

இளங்கோ-ரோகிணி-அருண்மொழி என முக்கோணக் காதல் கதையில் கங்கை கொண்ட சோழபுரத்தின் உருவாக்கமும், கொடும்பாளூர் நகரின் நிர்மூலமும் என தொடரும் கதை கடாரத்தை இளங்கோ இராஜேந்திர சக்கரவர்த்திக்காக வெற்றிகண்டு வருவதுடன், அரசகுல தர்மத்தின்படி இருவரையும் கைத்தலம் பற்றுவதில் முடிவு பெறுகிறது.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:11
தலைப்பு: வேங்கையின் மைந்தன்-நாவல்
ஆசிரியர்: அகிலன்
மொத்தப் பக்கம்: 646 (மின்நூல்)

Sunday, March 18, 2018

சொற்கள்

உன் விருப்பம் போல் எழுது
உனக்கு பிடித்த முறை எதுவாயினும்
அந்த முறையில் எழுது
பாலத்துக்கடியில்
மிக அதிகமான ரத்தம் பாய்ந்துவிட்டது
தொடர்ந்து நம்பிக் கொண்டிரு
அந்த ஒரே ஒரு பாதைதான் சரியானதென்று
கவிதையில் எல்லாவற்றுக்கும் இடமுண்டு
இயல்பாகவே ஒரே ஒரு நிபந்தனைதான்
ஒரு வெற்றுப் பக்கத்தை நீ மேம்படுத்த வேண்டும்.

ஸ்பானிஷ் கவி நிகனோர் பர்ராவின் இக்கவிதை புதிதாக எழுதவரும் இளம் கவிஞர்களுக்கான ஒரு எளிய வழிகாட்டி.

சொற்கள் முழுக்க முழுக்க கவிதைகளுக்கான காலாண்டிதழ்.

சிக்மா, பத்மஜா அய்யங்கார், எலிசபெத் குரியன் மோனா மற்றும் மந்திரபு ஹைமாவதி கவிதைகளை மதுமிதா மொழியாக்கம் செய்துள்ளார். யயாதி மதன் காந்தி கவிதையை பத்மஜாவும் நிகனோர் பர் ராவின் கவிதைகளை எம்.கார்திகேயனும் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்.

என்.பெரியசாமி, வெய்யில், இசை, கார்த்திக் நேத்தா, மோகனரங்கன், லட்சுமி மணிவண்ணன், ஆகாசமுத்து, ப.தமிழ்ச்செல்வன், சிவமணி, இர. தங்கபாலு, மீரா வில்வம், அழகு நிலா, ஆத்மாஜீ, வே.பாபு, ஆனந்த், ஷா அ, வேல் கண்ணன், ஜான் சுந்தர், ஸ்ரீ சங்கர விஸ்வநாதன், ஜேப்ராங்க்ளின் குமார், யாழி, கனிமொழி ஜி, குமார நந்தன், விஷ்ணுகுமார், பின்னி மோசஸ், ராஜேஷ் ஜீவா, கௌதம சித்தார்த்தன், பழனி பாரதி என இருபத்தி எட்டு கவிஞர்களின் கவிதைகளோடு தனது முதல் பயணத்தை துவங்கியுள்ளது சொற்கள். இவர்களில் சிலரை நான் முகநூல் வழியே வாசித்திருக்கிறேன், சிலரை வேறு சில சிற்றிதழ்களில் வாசித்திருக்கிறேன். சிலர் இப்போதுதான் புதியவர்கள். எல்லோரையும் ஒரே இதழில் வாசிக்கும்போது கவிதைகளின் வெளியையும், போக்கையும் அவதானிக்க முடிகிறது.

ஆத்மாநாம் உடனான பிரம்மராஜனின் நேர்காணல் மிக அருமை. நிறைய விடையங்களை விபரித்து சென்றுள்ளது. இதுபோன்ற நேர்காணல்கள் கவிதைகள் மீதான சந்தேகங்களுக்கு நிவர்த்தியாக அமையும்.

சிற்றிதழ்கள் நீண்டகாலம் உயிர் வாழ்தல் என்பது நடவாத ஒன்றாகவே உள்ளது. ஆனால் வாழும் காலத்தில் அவை தரமாக வாழ்ந்துவிடுவதில் இன்னும் உயிர்ப்பு இருக்கிறது.

தலையங்கத்தில் ஆசிரியர் சாத்வீக முறையிலான கவிதைகளோடு இருக்க விரும்புகிறார். இது இன்றைய நிலையில் எழும் மனதின் நிலைப்பாடுதான். அதேபோல் கவிதைகளைத் தருவிப்பதிலும், கவிஞர்களை அடையாளம் காணுவதிலும் சோர்வுற்றுப் போனதாக எழுதியுள்ளார். வரும் இதழ்களில் அந்த சோர்வுகள் இருக்காது என்ற நம்பிக்கையை இந்த இதழ் வெளிப்படுத்தியுள்ளது.

சி.மணிக்கு சமர்ப்பணத்தோடு கவிதைகளுக்காகவே சிறப்பாக தன்னம்பிக்கையோடு வெளியிட்டிருக்கும் திரு. கே.சி.செந்தில்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காது தொடர்ந்து இதழ் தனது வெற்றி பயணத்தை தொடர வாழ்த்துக்கள்.


அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:12
தலைப்பு: சொற்கள் (கவிதைக்கான காலாண்டிதழ்)
ஆசிரியர்: கே.சி.செந்தில்குமார்
மொத்தப் பக்கம்: 48
விலை: ₹50 

Tuesday, March 13, 2018

எல்வின் கண்ட பழங்குடிகள்

வெரியர் எல்வின் இங்கிலாந்தில் கென்ட் மாகாணத்தில் 1902ல் பிறந்தவர். 1964ல் இந்தியாவில் தன் வாழ்வின் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டவர்.

பக்தவச்சல பாரதி அவர்களது அறிமுக உரையில் சொல்லப்பட்டது போல "தமிழில் எழுதப்பட்ட தன்வரலாறுகளை விட தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட தன்வரலாறுகளே மிகுந்த கவனம் பெற்றவை."

இங்கிலாந்திலிருந்து கிறித்துவ திருச்சபை பணியாளராக இந்தியா வந்து, இந்தியத்துவால் ஈர்க்கப்பட்டு கிறித்துவ சபையிலிருந்து விலகி ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே இந்திய விடுதலை இயக்கத்தை ஆதரித்து, இந்தியப் பழங்குடிப் பெண்ணை மணந்து நான்கு மகன்களுக்கும் இந்தியப் பெயர்களையே சூட்டி, இந்திய அரசில் பணியாற்றி, இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியக் குடியுரிமை பெற்று இந்தியராகவே மாறி பத்ம பூஷண் விருது பெற்று இந்தியாவிலேயே உயிர் துறந்த மானிடவியலாளரே வெரியர் எல்வின்.

மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் வாழ்ந்த ஒருவர் கீழை நாட்டுக் கலாச்சாரத்தில் அதிலும் பழங்குடிகள் கலாச்சாரத்தில் தன்னை ஐக்கியப்படுத்தி தன் வாழ்க்கை முழுவதையும் அவர்களோடு ஒன்றிப்பழகிய ஒரு தன்னிகரற்ற மாமனிதர். அவர்களைப் பற்றிய யாரும் அறிந்திடாத பல்வேறு விடயங்களை நேரில் சென்று வாழ்ந்து வெளி உலகிற்கு அறிமுகம் செய்வது சாகசமாகவே உணரமுடிகிறது.

இலங்கை, ஆப்ரிக்கா, இந்தியாவின் மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளின் பழங்குடி மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக்கூறுகள், மொழி, காதல், உறவுமுறைகள், உணவுகள், தொழில் என பல விடையங்களை பதினோரு தலைப்புகளில் இந்நூல் விவரிக்கிறது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு பிறகு சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களும் இந்த ஆதிவாசிகள் மீது சீர்திருத்தம் எனும் பெயரால் நிகழ்த்திய கொடுமைகளையும், அதனால் பழங்குடி மக்கள் தங்கள் இயல்பான சுதந்திரத்தை இழந்துவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். சுதந்திர இந்தியா பழங்குடிகளின் சுதந்திரத்தை பறித்தே விட்டது. வனங்களை அரசே நிர்வாகம் செய்யத் துவங்கியது. அவர்களது விவசாய நிலங்களை கையகப் படுத்தியிருக்கிறது. இயல்பான அவர்களது நடனங்களை, கலைகளை அவர்கள் இழந்துவிட்டார்கள்.

இந்த நூலை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாசகர் வட்டம் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறது. பின்னர் முப்பத்தாறு ஆண்களுக்குப் பின் அதாவது 2003ல் விழுதுகள் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சில செய்திகளை கூடுதலாக இணைத்து இப்போது அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் (1910-2006).

வெரியர் எல்வின் இந்தியப் பழங்குடிகளின் வாழ்வியலை வெளி உலகு அறியச் செய்த விடிவெள்ளி என்றால் மிகையல்ல.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:10
தலைப்பு: எல்வின் கண்ட பழங்குடிகள்
ஆசிரியர்: வெரியர் எல்வின்
வெளியீடு: அடையாளம்
மொத்தப் பக்கம்: 224
விலை: ₹160 

Monday, March 5, 2018

உலோகம்-கறல் ஏறிய தகரத் துண்டு

வாசிப்பை நேசிப்போம் வழி அறிமுகமான ப்ரதீஷ் எனும் நண்பர் மூலமாக எனக்கு வாசிக்கக் கிட்டியதுதான் இந்த நாவல். இதை நாவல் என சொல்வதைக் காட்டிலும் அதீதமான கற்பனைகள் நிரம்பிய ஒருவரது சுயசரிதை என்பேன். என் நன்றிகளை நண்பர் ப்ரதீஷ் அவர்களுக்கு முதலில் சொல்லிவிடுகிறேன்.

பலரும் பல்வேறுவிதமாக இதை விமர்சனம் செய்திருப்பதை அறிவேன். அதனால்தான் நண்பர்கள் என்னிடம் இதைப்பற்றி விவாதம் செய்யும்போதுகூட அமைதியாக இருந்திருக்கிறேன். வாசிக்காமல் நாம் எந்த முடிபுக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பவன்.

மின்னஞ்சல் வாயிலாக தினமும் ஜெயமோகன் அவர்களது பத்தி எழுத்துகளை வாசிப்பவன். எழுத்து வசீகரத்தை குறைசொல்ல ஏலாது. அதற்காக அந்த எழுத்துகளை, மொழியை தவறாக பயன்படுத்துவதை சகித்துக்கொள்ள இயலாதுதானே? அப்படியாகத்தான் இந்த நூல் முழுவதும் சகித்துக்கொள்ள இயலாத அபத்தமான, ஆபாசமான விடயங்கள் விரவிக் கிடக்கின்றன.

எந்த ஒரு போராட்டக் குழுவும் விமர்சனத்துக்கு உட்படாமல் இயங்க இயலாது. இதுதான் நியதி. அப்படித்தான் விடுதலைப் புலிகள் இயக்கமும். கொரில்லா முறை போரிலிருந்து மரபு ரீதியான இராணுவ அமைப்பாக தங்களை கட்டமைத்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலைகள் அதிகம். இறுதிக்கட்டப் போரில் புலிகள் செய்த தவறுகளை நானும் விமர்சனப் பார்வையோடுதான் பார்க்கிறேன்.

உலோகம் ஒரு சினிமா பாணியில் எழுதப்பட்ட மாபியாக் கூட்டத்தின் கதையாகவே என்னளவில் இருக்கிறது. விந்தின் துர்நாற்றமும், இரத்தத்தின் கவுச்சியும், பாலியல் வறட்சி, புகை வாடை, அதீதமான செயல்பாடுகள் என நூல் எங்கும் துர்நாற்றம் வீசுகிறது.பெண்ணுடல் மீதான வேட்கை அபத்தமானது. இது புலிகள் அமைப்பில் இல்லாத ஓன்று என்பதை அனைவரும் அறிவர். அதே நேரம் "ரோ" எனும் உளவு அமைப்பை அதிசிறப்பான ஓர் அமைப்பாக காட்ட முனைந்திருக்கிறார். அதன் விளைவு புலிகள் அமைப்பை கொச்சைப்படுத்தி கதையை நகர்தியிருக்கிறார். ரோ வின் செயல்பாடுகளை ஈழ வரலாறு உள்ளவரை மாற்றி எழுத இயலாது. அதன் கசப்பான நிகழ்வுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டன. இன்றைக்கும் இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதன் கசப்பான சம்பவங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன என்பதும் ஆசிரியர் அறிவார்.

"உலோகம் கறல் ஏறிய தகரத் துண்டு" என்றுதான் வாசித்து முடித்ததும் உணர்ந்துகொண்டது.

#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:9
தலைப்பு: உலோகம்-நாவல்
ஆசிரியர்: ஜெயமோகன்
மொத்தப் பக்கம்: 140 (மின்நூல்)

Sunday, March 4, 2018

சிவந்த மண்-சுகன்யா ஞானசூரி

  (அனைவருக்கும் வணக்கம்... நான் சிறுகதை ஒன்றை எழுத முயற்சி செய்துள்ளேன். கீழே அந்த கதை பதிவு செய்துள்ளேன். வாசித்துவிட்டு சொல்லுங்கள்.)

சிவந்த மண்

பசுமை போர்த்திய அந்தப் பெருங் காடுகள் ஒருபோதும் எண்ணிப் பார்த்திருக்காது தங்களது இந்த நிலையை. பறவைகள், விலங்குகள், பூச்சிகள் மனிதர்கள் என கொஞ்சம் மாற்றமான உலகுதான். எம் காட்டில் உள்ள மரங்களில் பாதிகூட உலகத்தின் காடுகளில் இல்லையென செருக்குற்று இருந்திருக்கக்  கூடும் அந்தக்  காடுகள்.

       இராணுவத்தின் டாங்குகளின் அதிர்வுகளில், பீரங்கிகளின் முழக்கத்தில் மொத்தக் காடும் கலங்கித்தான் போய்விட்டது. பறக்க எத்தனித்த பறவைகளின் சிறகுகள்கூட எரிந்து போனது. உலக வல்லாதிக்கப் படைகள் எல்லாம் ஓரிடத்தில் கூடினால் சின்னத்  தேசம் என்ன செய்யும்? வெடிச் சத்தத்தில் மொத்தக் காடும் அழுகுரல்களின் கூடாரமகியது.

        உச்சகட்ட தாகுதல்களுக்கிடையே ஒரு குரல் காற்றில் கரைந்து கொண்டிருகிறது. அடியோடு பெயர்ந்து விழும் அந்த மரங்களுக்கிடையே..... பாஸ்பரஸ் குண்டுகளின் அமில மழைகளுகிடையே..... அந்தக் குரல் விட்டு விட்டு ஒலிக்கிறது......

        வெடித்து சிதறிய சன்னங்கள் மனித உடல்களை மட்டுமல்ல காட்டு விலங்குகளையும் இரத்ததில் குளியாட்டுகிறது...... அமிலத் தீயில் மரங்களோடு பல உடலங்களும் எரிந்து பொசுங்கிக் கொண்டிருக்கிறது.......
   
         உடல் கருகும் வாடைகள் காற்றில் கலந்து குடலைப் புரட்டுகிறது....... மனதில் ஒருவித வெறி தொற்றத்தான் செய்கிறது...... வானூர்திகளின் பேரிரைச்சல் களுக்கிடையே பானு....பானு....என ஒரு ஆண் குரல் காற்றில் கலந்து கேட்கிறது. மொத்த சக்திகளையும் இழந்து இறுதித் தவிப்புகளில் தேடுவதாகவே தெரிகிறது.
   
         இரத்தமும் சேறுமாய் இருக்கும் உடலங்களை அவன் திருப்பித் திருப்பிப் பார்க்கிறான். பானுவுக்கு ஒன்றும் ஆகியிராது என்று அவன் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாலும் மனம் பதற்றத்தோடு தேடுகிறது. அவனது சிறுவயது எண்ணங்களும் பின்னோக்கி ஓடுகிறது.

           தீரன் சீக்கிரம் வா.... பொம்பர்க்காரன் (ஒரு வகையான போர் விமானம்) வட்டமடிக்குறதைப் பார்த்தால் ஏதோ அசுமாத்தம் நடக்கப் போவுதெண்டு நினைக்குறேன் தீரா..... வீட்டுக்கு சீக்கிரம் போய்விடுவோம் வா பானு......  என இருவரும் மரங்களின் மறைவுகளினுடே வானத்தைப் பார்த்தவாறு மறைந்து மறைந்து நடக்கின்றனர்.

            அன்றுதான் அந்த துயர சம்பவம் நடந்தது. பள்ளி முடித்து வீட்டுக்கு கிளம்பியபோது வட்டமடித்த அந்த விமானம் பீப்பாய் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றது. வெடித்த அந்தக் குண்டுகளில் சுக்கு நூறாய்ப் போனது பானுவின் வீடு மட்டுமல்ல அவளது பெற்றோரும்தான்.

             அனாதையாக நின்றவளை என்னால் என் வீட்டுக்கு கூட்டிச் செல்ல முடியவில்லை. வீட்டில் யாரெண்டு கேட்டால் நண்பி எண்டு சொன்னாலும் நம்பமாட்டார்கள். காதலி எண்டு சொல்லவும் முடியாது. சொல்லிவிடும் துணிவும் எனக்கில்லை. சொல்லுகின்ற வயதுமில்லை அது. செஞ்சோலை இல்லம் அவளை அழைத்துச் சென்றது. காதல் மட்டும் கண்களில் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

             இங்கு காதல் அப்படித்தான். துரித உணவுகளைப் போல செரிக்காத காதல்கள் இங்கில்லை. ஆரோக்கிய உணவுகளைப் போன்றவர்கள். ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அன்புகளை மட்டுமே பரிமாறிக் கொள்வார்கள்.

              சில ஆண்டுகளுக்குப் பிறகு நாங்களும் யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர நேர்ந்தது. வன்னியில் சித்தி குடியிருந்ததால் நாங்களும் அங்கு குடியேறினோம்.

               முதன்முதலாக வன்னிக் காட்டை பார்த்தபோது பிரமித்துப் போய்விட்டேன். அவ்வளவு பசுமையும், நெடுமரங்களும் என அழகாய் காட்சி தந்தது.

                 இந்தக் காடுகள் எம்மைப் போல் இடம் பெயர்ந்துவிடக் கூடாது. அப்படி ஒருவேளை நிகழ்ந்து விட்டால் எமது பண்பாட்டுக் கூறுகளை, எம் இனத்தின் அடையாளங்களை நாம் இழந்து விடக்கூடும்.

                   வன்னிக்கு வந்தபோதுதான் பானுவையும் பார்க்க நேரிட்டது. பானுவை மீண்டும் அங்கு கண்டபோது வார்த்தைகள் எழவே இல்லை. அவளைக் கட்டியணைத்து அழுதுவிட வேண்டுமென மனம் துடித்தது. இத்தனை ஆண்டுகளில் பானு நிறையவே மாறிவிட்டாள். என்னைமட்டும் மறக்கவில்லை.

                    பானுவைக் கண்டத்தில் நான் என்னையே முழுவதுமாய் இழந்து விட்டதாக எனக்குள் தோன்றியது. இருக்காதா பின்ன..... எத்தனை நாட்களாகிவிட்டது அவளைப் பார்த்து பேசி.

                   இப்படியாக ஒருசில ஆண்டுகள் நான் பானுவை பார்ப்பதும் கதைப்பதும் தொடர்ந்தது.

                    அன்றைய தினம் அப்படி நான் பானுவை பார்க்க சென்றபோதுதான் அந்த இறுதிக் கணங்களுக்குள் நானும் அகப்பட்டுக் கொண்டேன்.

                     எரிந்து கருகும் உடலங்களின் வாடையும், அமிலக் குண்டுகளின் நெடியும் நிலைகுலையச் செய்துவிட்டது. இன்னொரு கிரோஷிமா, நாகசாகியின் கதிர்வீச்சுக்கள் எம் மண்ணிலும் தங்கியிருக்கக் கூடும். இங்கே செத்துப் பிழைக்கும் உயிர்களில் நிச்சயம் அது கடத்தப்படக்கூடும்.

                      இறந்து கிடக்கும் உடலங்களை வல்லாதிக்க அரக்கர்கள் வன்புணர்வு கொள்வதைக் கண்டு மனம் நொந்தது. ஐயோ... பானு  நீ உயிரோடு இந்த அரக்கர்கள் கையில் அகப்படக்கூடாது.... மனம் துடியாத் துடித்தது.

                       இந்த வல்லூறுகளுக்கு எதிராக நாம் சண்டையிடுவது தவறா? எமக்கென்று ஒரு வாழ்க்கை....அதில் கொஞ்சம் சந்தோசம் எதிர்பார்ப்பது தவறா? ஆதிமுதல் ஆண்ட இனம் தனக்கென தனித் தேசம் கேட்பது தவறா? இத்தனை இலட்சம் உயிர்களை கொல்லும் போர் வேண்டுமா? அன்பைப் போதிக்கச் சொன்ன புத்தனின் குழந்தைகள் ஏன் எம் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட வேண்டும்?

                        அவனுக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது. இங்கு கத்துகிற கதறல் சத்தங்கள் கூட கடல் தாண்டிக் கேட்குமென நம்பமுடியாது. இதோ இங்கிருக்கும் கஜவர்களின் கூட்டத்தில் பல நாட்டுக் கறுப்பாடுகளும் சேர்ந்ததல்லவா ஒரு இனத்தை வேட்டையாடுகிறது.

                        எம் இனம் கட்டியெழுப்பிய கண்ணியமான, கட்டுக்கோப்பான வளர்ச்சி பொறுக்காது ஏற்படுத்தப்பட்ட போராகவே எமக்குத் தெரிகிறது. தமது இயலாமைகளை எமது பெண்கள் மீது வன்புணர்வின் ஊடாக தீர்த்துக் கொண்டல்லவா இருக்கிறார்கள்.

                        உண்மையான போர்வீரன் ஒருபோதும் இந்த இழிசெயலை செய்ய கனவிலும் நினைக்கமாட்டானே.

                        பானு.... பானு.....நீ எங்குதான் இருக்கிறாய்? நீ பாதுகாப்பு வலயத்துக்குள் சென்றிருந்தால்கூட சந்தோசம்தான் பானு. பாதுகாப்பு வலையத்துக்குள் பானு சென்றிருக்கக் கூடுமென நினைத்து திரும்புகையில் தீரா.......... அடி ஈனசுரத்திலிருந்து ஒரு பெண் குரல். தீரா ....... தீரா ........ அது பானுவின் குரலாகவே தெரிகிறது. அதோ....... அதோ........ அவள்தான்...... பானு...... நான் தேடிக்கொண்டிருந்த பானு....... கண்கள் பனிக்க அவளை ஆரத் தழுவ ஓடுகிறேன்...... சப்பாத்துக் கால்களோடு சில ஓநாய்கள் அவளை மிதித்துக் கொண்டிருக்கிறது.

                         ஐயோ...... பானு....... உன்னையும் இந்த வல்லூறுகள் விட்டு வைக்கவில்லையா? பானு..... பானு..... கதறிக்கொண்டு அவளருகில் செல்வதற்குள் துப்பாக்கிகள் வெடித்தது. உடலெங்கும் இரத்தம் பீறிட்டெழ மிச்சம் மீதியாய் இருந்த அந்த வெண்மணல் பரப்பும் சிவந்தது.

Friday, March 2, 2018

பொன்னியின் செல்வன்-கல்கி

பொன்னியின் செல்வனை வாசிக்காதவர்கள் இருப்பார்களா என்றால் சந்தேகம்தான். ஏனெனில் ஒவ்வொரு சென்னை புத்தகச் சந்தையிலும் இன்றுவரை அதிகம் விற்பனையாகும் நூல்களில் பொன்னியின் செல்வனும் ஓன்று. கல்கி அவர்களது சிறப்பான நடைச் சித்திரம் இந்த நூலின் பக்கம் பல வாசகர்களை இழுத்துள்ளது என்பேன். உண்மை எது? புனைவு எது? என பிரித்தறிய முடியாதபடிக்கு கதைகளை தொய்வின்றி எழுதியிருக்கிறார். வரலாற்றுக் குறிப்புகள், கள ஆய்வுகளைக் கொண்டு மூன்றரை ஆண்டுகாலம் தொடராக எழுதியிருக்கிறார். அந்த மூன்றரை ஆண்டுகாலமும் தொடர்ச்சியாக காத்திருந்து வாசித்த அன்றைய வாசிப்பாளர்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். பொன்னியின் செல்வன் பற்றி பிறர் பேசக் கேட்டு பெரும் ஆவலோடு வாசிக்க அலைந்துகொண்டிருந்தேன் என்று சொன்னாலும் தப்பில்லை. தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டை ஒட்டி எல்.கே.எம் பப்ளிகேசன் ஐந்து பாகங்களும் அடங்கிய தொகுப்பொன்றை சலுகை விலையில் அறிவித்திருந்தது. சங்கர் படத்தைப் போன்ற பிரம்மாண்டத்தினை இந்த நாவலை வாசித்து முடித்ததும் உணர்ந்தேன்.

பிற்காலச் சோழர்களில் குறிப்பாக அருள் மொழி வர்மன் எனும் இராச இராச சோழனை கதை நாயகனாக கொண்டு உருவாக்கப்பட்ட வரலாற்று சரித்திரமிக்க நாவல் இது. வல்லவராயன் வந்தியதேவனும், நந்தினியும் என் மனதை பாதித்த கதாபாத்திரங்கள். இவர்கள் இருவரும்தான் மொத்த கதைக்கான அச்சாணி. இவர்கள் இல்லாமல் போயிருந்தால் இந்தக் கதைகள் சுவாரசியம் அற்றுப் போயிருக்கும். சோழ சாம்ராச்சியத்தின் பலம், பலவீனம், அன்றைய காலகட்டத்தில் இருந்த கிராமங்கள், நகரங்கள், ஓடிய ஆறு, ஆர்ப்பரிக்கும் கடல், வனிகத் தொடர்புகள், கலை கலாச்சாரம் போன்றவற்றை ஆவணமாக்கியிருக்கிறது.

நாளைய தலைமுறைக்கும் இந்நூல் போர் கலையோடு இன்ன பிறவற்றையும் கடத்திச் செல்லும் ஒரு முக்கிய பெட்டகமாக இருக்கும். இது தமிழுக்கும், தமிழர்க்கும் கிடைத்திருக்கும் முக்கியமான தகவல் களஞ்சியம். இன்றைக்கும் நிமிர்ந்து நிற்கும் பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றின் சாட்சியம். தமிழர்களின் சிறப்பான கட்டிடக்கலைக்கு சான்று.

பொன்னியின் செல்வனைப் போன்று இன்னும் பல அரசர்களின், அரசிகளின் வாழ்க்கை முறைகளை, அகம், புறம் போன்றவற்றை எவ்வித பக்கச் சார்புகளுமின்றி நடுநிலையோடு எழுத வேண்டும். சோழப் பேரரசுகளை மட்டுமல்லாது சேர, பாண்டிய பேரரசுகளையும் நாம் ஆவணப்படுத்த வேண்டும்.

அடையாள எண்: NV 104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:8
தலைப்பு: பொன்னியின் செல்வன்-சரித்திர நாவல்
ஆசிரியர்: அமரர் கல்கி
மொத்தப் பக்கம்: 856
வெளியீடு: எல்.கே.எம் பப்ளிகேசன்
விலை: ₹290