Wednesday, February 21, 2018

பெருமாள் முருகனின் மூன்று நாவல்கள்

பெருமாள் முருகனின் மூன்று நாவல்கள். 

2017 சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கியது. மாதொரு பாகன் சர்ச்சைகளால் அதை வாசிக்க விரும்பி தேடியபொழுது மூன்று நாவல்களை ஒரே தொகுப்பாக காலச்சுவடு சிறப்புத் தள்ளுபடியில் வெளியிட்டதை அறிந்து வாங்கினேன். இப்போதுதான் வாசிக்கும் சூழல் அமைந்திருக்கிறது. பெருமாள் முருகனை அதுவரையில் நான் வாசித்திருக்கவில்லை. ஆனால் ஒரு எழுத்தாளன் மீது தொடுக்கப்பட்ட அந்த சர்ச்சைதான் அவர் யார் என்பதை அடையாளம் காட்டியது. இங்கு நாம் எழுத்துக்களைக் கொண்டாடும் அளவுக்கு எழுத்தாளர்களை கொண்டாடுவதில்லை. இலக்கியம் என்றால் சங்கப் பாடல்கள் மட்டுமே இலக்கியம் எனும் மன நிலையிலிருந்து நாம் இன்னும் வெளிவரவில்லை. அவர்கள் அன்றைக்கான சமகால பிரச்சினைகளை பாடுபொருளாகினர். இன்றைய சமகாலத்தினை புனைவுகளின் ஊடாக சொல்லிச்செல்வதும் இலக்கியம்தான்.

1.மாதொரு பாகன்: 

பூவரசம் பூவின் மஞ்சள் வண்ணத்தில் துவங்கும் கதை அதன் செந்நிறத்தில் முடிகிறது. காளி எனும் பாத்திரத்தின் மனம் இறுதியில் எடுக்கும் முடிவு மனதை கனக்க வைக்கிறது. பொன்னா எனும் பத்திரம் அன்றைய பெண்களின் நிலைகளை சுமந்து நிற்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் இக்கதை நிகழ்கிறது. வாரிசு வேண்டி கரட்டு மலைக்கு பெருநோம்பி செல்லும் பொன்னா ஓர் அபலையின் குறியீடு. பொன்னா மீது காதலை கொட்டும் காளியால் பொன்னாவின் வயிற்றை ரொப்ப முடியாதது இயலாமை. கரட்டு மலையில் பெருநோம்பி அன்று கடவுளின் பெயரால் வேறு ஒரு ஆணோடு புணர்ந்து குழந்தை பாக்கியம் பெறுவதை, அது கடவுளின் குழந்தை என வளர்ப்பதை சிலர் ஏற்றுக்கொண்டாலும் காளியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகவும் கருத இடமுண்டு. தாய்,தந்தை,அண்ணன் மற்றும் மாமியாரின் சம்மதத்தோடு பெருநோம்பியில் கரட்டு மலையில் வேறு ஒரு ஆணுடன் புணரும் பொன்னா கணவன் களியோடு புணருவதாகவே நம்புகிறாள். காளியின் மனம் படும் பாடும், ஏமாற்றமும் அளவுக்கதிகமான குடியும் அவனது இறுதி முடிவை எடுக்கிறது. மாமனாரின் வீட்டில் இருந்து கொண்டுவந்து வைத்த பூவரசு செழிப்புடன் அவனுக்கான முடிவையும் தருகிறது.

2.அர்த்தநாரி: 

தொண்டுப்பட்டியில் செழிப்பாக நிற்கும் அந்த பூவரசின் கிளைகளில் ஒன்றை வெட்டுவதிலிருந்து துவங்குகிறது. பொன்னா வேறு ஆணோடு கூடிய துக்கம் தாளாமல் பூவரசில் தூக்கில் தொங்கும் காளியை காப்பற்றி விடுகிறார்கள். ஒரே வீட்டில் இருந்துகொண்டு பொன்னாவும் காளியும் ஒருவரை ஒருவர் பார்க்காமலும், பேசாமலும் ஒவ்வொரு நாட்களாக கழிகிறது. பொன்னாவின் உடலில் மாற்றங்கள் தெரிகிறது. மாசம் பத்து வந்து குழந்தையும் பிறந்துவிடுகிறது. குழந்தையை ஏறெடுத்தும் பார்க்காமல் செல்லும் காளியின் மனம் மாறும் என நம்புகிறாள் பொன்னா. ஆனால் காளியின் மனமோ மாறவில்லை. மனமுடைந்த பொன்னா விட்டதில் சேலையில் தூக்கு மாட்டச் செல்லும்போது ஆதுரமாக காளியின் கை பற்றுகிறது. சிவன் தன் உடல்பாகத்தில் உமையை ஏற்றுக்கொள்ளும் நிலையை அர்த்தநாரி என்கிறோம். இங்கும் அது பொருந்துகிறது.

3.ஆலவாயன்: 

காளி இறந்துவிட பொன்னா குழந்தையோடு வாழுகிறாள். தொண்டுப்பட்டிக்குள் காளி அரூபமாய் வந்து செல்கிறான். ஒரு ஆண் துணை இல்லாத வீட்டில் எப்படியான இன்னல்கள் அவளை நெருக்குகின்றன என்பதை விபரிக்கிறார். கரட்டுமலையில் பெருநோம்பியன்று கலவி கொண்டவனோடு போய் சேர்ந்து வழலாமா எனும் பெரும் மனப் போராட்டங்கள் பொன்னாவினுள் வதைக்கின்றன. அவன் பெயர் அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது அவனுக்கு அவள் வைத்த பெயராக இருக்கிறது. குழந்தையோடு கொஞ்சிப் பேசும் பொன்னா குழந்தைக்கு பெயர் வைக்க ஆசைப்படுகிறாள். குழந்தையின் காதில் ரகசியமாய் அந்தப் பெயரைச் சொல்கிறாள். அந்தப் பெயர் ஆலவாயன். 

மாதொரு பாகனின் முடிவிலிருந்து இருவேறு நாவல்களை உருவாக்கி பரீச்சார்த்தம் செய்திருக்கிறார். தமிழில் இப்படியான செயல்பாடுகள் அரிதினும் அரிதே. மூன்று நாவல்களையும் ஒரே மூச்சில் படித்தது சிறப்பு. பிசிறு தட்டாத எழுத்து வாசிப்புக்கான வேகத்தை தருகிறது. 

அடையாள எண்: NV 104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல்:5
மாதொரு பாகன், ஆலவாயன், அர்த்தநாரி-நாவல்கள்
ஆசிரியர்: பெருமாள் முருகன்
மொத்தப் பக்கம்: 544
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ₹260


1 comment:

  1. நறுக்கென்று மூன்று நாவல்களுக்கும் ஒன்றிணைத்த நல்ல அறிமுகம் (விமரிசனம்).

    ReplyDelete