Friday, February 16, 2018

நீலி-மாலதி மைத்ரி

கவிதைகளை உருவாக்குதல் என்பது ஒரு பெருங்கலை. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலே கவிதை. சங்க காலத்திற்குப் பிறகு இன்றைய காலத்தில்தான் பெண் கவிகளின் எழுச்சி வீரியம் பெற்றிருக்கிறது. பெண்ணியம், தலித்தியம் என தன் தளங்களில் சிறந்த கவிதையை அடர்த்தியாக எழுதி வரும் புதுச்சேரியைச் சேர்ந்த பெண் கவி தோழர் மாலதி மைத்ரி. இது இவரது மூன்றாவது தொகுப்பு. தனது சமூக செயல்பாடுகளை அன்றாடம் முகநூலில் பதிவு செய்து வருகிறார். பெண்களின் தொகுப்புகளை வெளியிடும் "அணங்கு" பதிப்பகம் இவருடையது ஆகும்.

வார்த்தைகளின் பேரரசி முகமற்று ஒலிக்கும் ஒவ்வொரு இசையையும் தனிமைத் துயரோடு காட்சிப்படுத்தி வார்த்தை ஜாலம் புரிகிறாள்.
"சொற்களின் அரசிகளே
குளிருக்கான கம்பளத்தை
நம் உடல்களால் நெய்வோம்
முகமற்று ஒலிக்கும்
தூரத்து மத்தள ஓசையைக் கேட்டபடி."

வெள்ளை ஏகாதிபத்தியம் இன்னும் நம்மை ஆட்கொண்டு திரிகிறது. அது இத்தேசத்தை இன்னும் இன்னுமென உறிஞ்சுகிறது. Made in USA எனும் கவிதை இதற்கு நல்ல உதாரணம்.
"வெள்ளை மாளிகையின்
மேல்மாடி ஜன்னல் வழியே
வெளி வழிந்து
சுவரோடு உரசி அசைகிறது
சாத்தானின் வால்...."
"அவரவர் தானியத்திலும்
அவரவர் பெயர்
நம் அனைவரின் சடலத்திலும்
Made in USA"

நுகர்பொருள் கலாச்சாரத்தின் சீரழிவுகளும், அது பெண்களின் மீது நிகழ்த்தும் வன்கொடுமைகளும் ஏராளம். அதை நம் வீட்டின் தொலைக்காட்சி வழி ஏற்றுக்கொள்வது தாராளம். அப்படியாகத்தான் "நுகர்பொருள்" எனும் கவிதை பின்னிரவில் பிரியாணிப் போட்டலத்தோடு ஒரு பைத்தியக்காரியை சிதைக்கும் கொடுமையை விவரிக்கிறது.

இவரது கவிதைகளில் நிறைய பைத்தியக்காரிகள் உலா வருகிறார்கள். "தெருப்பாடகி", "ஹராக்கிரி" போன்றவர்கள் நம்மைப் பார்த்து காறி உமிழ்வதுபோல் பேசி செல்கிறார்கள். சாலையோரங்களில் எங்கேனும் நாம் சந்தித்தவர்களாகக்கூட இருக்கலாம். அவர்களுக்கு "புனிதவதி" போல் சிவபதம் அடையும் வித்தை கிட்டியிருக்குமேயானால் இங்கே பைத்தியங்களாக உலா வந்திருக்க மாட்டார்கள். அதனால்தான் அவர்கள் நீலியாக உருமாறி எதையும் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டார்கள்.
"பேயின் மொழி
விடுதலை
பூமிக்கு வெளியே
நிற்கிறாள்
நீலி".

#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல்:1/ நாள்: 3
நீலி-கவிதைத் தொகுப்பு
ஆசிரியர்: மாலதி மைத்ரி
மொத்தப் பக்கம்: 72
வெளியீடு: காலச்சுவடு
விலை: ₹75.

- சுகன்யா ஞானசூரி (NV 104)

No comments:

Post a Comment