Thursday, December 29, 2016

பாடும் பறவையைப்போல்....

சூரியன் எழாத காலை வேளை
மழை நனைத்த மண் சாலை
பூக்களைத் தூவும் மலர்களின் சோலை
ஒரு குவளை சூடான தேநீர்...
இலைகளில் தங்கிவிட்டிருக்கும்
பேரருவியொன்றின் எச்சங்களை
உலுப்பியுலுப்பி நீராடும்
பனங்காய்ச் சில்லு வண்டியோட்டும்
அச்சிறுவனுக்குள் சிக்குண்டு
சிந்தைக்குள் பின்னோக்கிச் செல்கின்றேன்!
விசங்களைச் சுமந்தபடிக்கு அலையும் காற்றும்
தலையொடிந்த நெடும்பனைகளும்
குருதி வீச்சமும் கூப்பாட்டுச் சத்தமும்
சிந்தை கலங்கி நிகழ்காலம் சேர்த்தது.
மலர் தூவும் வாசனையோடு
மழை நனைத்த மண்மீது
நடந்து அழைந்து தேசம் முழுமையும்
திரிய வேண்டும் பாடும் பறவையைப்போல்
சுதந்திரக் காற்றை சுவாசித்தபடி!

[பரணி காலாண்டிதழில் (அக்டோபர் - டிசம்பர் 2016) வெளியாகியுள்ள எனது கவிதை]


வரவிருக்கும் புத்தாண்டிலாவது பாடும் இப்பறவைகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் எனும் நம்பிக்கையோடு வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை கூறி மகிழ்கிறேன்.

Sunday, December 18, 2016

பயிற்சிப் பட்டறையின் புகைப்படத் தொகுப்புகள்

பயிற்ச்சிப் பட்டறை புகைப்படங்கள்
கணினித் தமிழ்ச் சங்கத்தினரால் புதுக்கோட்டை மெளண்ட்சீயோன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையின் புகைப்படத் தொகுப்புகள்


வலைச்சித்தர் திருமிகு திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களோடு


புதுக்கோட்டையின் இலக்கிய ஆளுமைகளோடு(இடமிருந்து வலமாக கவிஞர் முத்து நிலவன் ஐயா, தோழர் மகா.சுந்தர் ஐயா, கவிஞர் தங்கம் மூர்த்தி ஐயா, தோழர் கவிமதி சோலச்சி மற்றும் திருச்சியைச் சேர்ந்த கவிஞர் ஜெயராமன் ஐயா ஆகியோரோடு)



விக்கிபீடியா பயிற்றுநர் திருமிகு பிரின்ஸ்.என்.ஆர்.எஸ் தோழர் அவர்களோடு



வலைப்பதிவின் முன்னோடிகள் திருமிகு முனைவர் ஜம்புலிங்கம் ஐயா மற்றும் தேவகோட்டை கில்லர்ஜி ஐயா ஆகியோருடன்



கவிஞர் திருமிகு தங்கம் மூர்த்தி ஐயா அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகையில்


கணினித் தமிழ்ச் சங்கத்தின் பயிற்சிக்கான கையேட்டினை கவிஞர் தங்கம் மூர்த்தி ஐயாவிடமிருந்து பெற்றுக்கொள்பவர் திருமிகு கவிஞர் கீதா அம்மா அவர்கள்.

Saturday, December 17, 2016

வருக... பயன் பெறுக... வலைப் பதிவுகள் குறித்த ஒருநாள் பயிற்சிப் பட்டறை

வணக்கம் வலைப்பூ உறவுகளே...

சென்றாண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற வலைப்பதிவர்களுக்கான சந்திப்பே வலைப்பூவில் என்னையும் இணைத்துக் கொண்டது. உலகமெங்கிலும் இருந்து திரளான வலைப் பதிவர்கள் பங்குபற்றி விழாவினை வெற்றிபெறச் செய்தனர்.

இப்போதுதான் புத்தகத் திருவிழாவினை வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளனர். அதற்குள் மீண்டுமொரு நிகழ்வினை திட்டமிட்டு சிறப்பாகச் செயல்படுத்தி வாருகின்றனர்.

 புதுக்கோட்டையில் வலைப்பதிவுகள் தொடர்பாக பயிற்சி பட்டறை ஒன்றினை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (18/12/2016) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறவுள்ளது.

விழா அழைப்பிதளினை இதில் இணைத்துள்ளேன். மேலதிக விபரங்களுக்கும், விளக்கங்களுக்கும் கவிஞர் முத்து நிலவன் ஐயா அவார்களின் வலையில் காண வேண்டுகிறேன்.

சரியான முன்தயாரிப்புடன் விழாவிற்கான ஏற்பாட்டினை செய்து வரும் விழா அமைப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ....