Wednesday, March 2, 2016

நட்சத்திரங்களினூடே...

இரவுப் பாடலை மரித்துவிட்டு
கருநீலப் போர்வைக்குள்
உறங்கும் ஆழ்கடலில்
நடு இரவின் நட்சத்திரங்களை
அவன் எண்ணிக் கொண்டிருக்கிறான்.

மெளன மொழியில் அவைகள்
அவனிடத்தில் எதையோ சொல்வதுபோல்
மின்னிக் கொண்டிருக்கின்றன.

ஊமைப் பெண்ணென நிலவும்
அமைதியாய் அழுதபடி
நசுக்கும் பூத முகில்களுக்கிடையில்
எட்டியெட்டிப் பார்க்கிறது.

காற்றின் சலனமற்றுத்
தளும்பும் தோணியொத்த
ஊசலாடும் வாழ்வில்-அவன்
மனமும், மக்கள் வாழ்வும்.

காதுகளை கையால்
பொத்துவதும் எடுப்பதுமாய்
சத்தங்களை ஆய்வு செய்தபடி இருக்கிறான்
ஒரு விசரனைப்போல்.

மூலை முடுக்கெல்லாம்
அழுது குழறிய
முள்ளி வாய்க்காலின்
மரண ஓலங்கள்-அவன்
காதுகளை செவிடாக்கி யிருக்கக்கூடும்....

நள்ளிரவு தாண்டியும்
அவன்
நட்சத்திரங்களை எண்ணுகிறான்
ஊமை நிலவோடு சேர்ந்து...

விடியலுக்குள்
எண்ணிவிடும் முனைப்போடு இருக்கும் 
அவனுக்கு தெரியாமல் இல்லை
வகை தொகை தெரியாமல்
அழிக்கப்பட்ட எம் உறவுகளை
நட்சத்திரங்களினூடே 
எண்ணிவிட முடியாதென்பது.

- சுகன்யா ஞானசூரி.

No comments:

Post a Comment