Wednesday, March 2, 2016

எம் வாழ்வின் மிச்சமாய்...


அந்த
ஒற்றை மரத்தின்
உச்சக் கொப்பில்தான்
காதல் மொழி கதைத்தபடி
களித்திருந்தன
அத்தேசத்தின் பறவைகள்.
நடுநிசி கடந்து
இரண்டாம் சாமமொன்றில்
வேட்டைக் கூட்டமொன்று
ஊருக்குள் புகுந்திருப்பது தெரிகிறது
மிகச் சமீபமாய்க் கேட்கிறது
சுடுகுழலின் சத்தங்கள்.
காலைக் கதிரவன்
பின்காலைக்குள் செல்லும் வேளை
ஓய்ந்திருந்தது சுடுகுழல் சத்தம்.
கனத்த மௌனத்தின்
பெரு வெளியில்
பதுங்குகுழி தாண்டியும்
பரவிக் கிடந்தன!
முறிந்த மரக் கொப்புகளோடு
பறக்க மறுத்து
சிதறிக் கிடந்த
ஒவ்வோர் இறகினின்றும்
வழிந்தபடி இருக்கிறது
பெருந்துயரம் சுமந்த
வாழ்வின் நிகழ்வொன்று!

- சுகன்யா ஞானசூரி.

No comments:

Post a Comment