Saturday, January 30, 2016

21-ஆம் நூற்றாண்டு வாசிப்பாளனின் பார்வையில் "பொறிகள்" கவிதை கூட்டுத் தொகுப்பு.

பழைய நூல்களை, இதழ்களை வாசிக்கும்போது நாம் அக்காலகட்ட உலகுக்குள் பயணிப்பது, அம் மனிதர்களோடு உரையாடுவது போன்றெல்லாம் உணர்வுகள் எழும். அது ஒரு தனி சுகம். அதை ஒரு வாசிப்பாளனாலும், படைப்பாளியாலும் மட்டுமே உணர்ந்துகொள்ள இயலும்.
30.01.1974 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "பொறிகள்" எனும் கூட்டுக் கவிதைத் தொகுப்பை வாசிக்கையில் இத்தகைய உணர்வு என்னுள்ளும் எழுந்தது. நூலகம்.ஒர்க் எனும் ஈழத்து படைப்பாளர்களின் நூல்களை பத்திரப்படுத்தும் இணையதளத்தில் மின்னச்சு வடிவில் வாசிக்கக் கிடைத்தது எனக்கு.
சபா.ஜெயராசா, எம்.எச்.எம்.சம்ஸ், திக்குவல்லை.கமால், கல்முனைப் பூபால், முல்லை வீரக்குட்டி, ராதேயன், சண்முகம் சிவலிங்கம், செந்தீரன், அன்பு டீன், சிவம், சௌமினி, பாலமுனை பாருக், ஷெல்லிதாசன், நா.லோகேந்திரலிங்கம், யோனகபுர-ஹம்சா, அன்பு.ஜவகர்சா, நீள்கரை நம்பி, அ.யேசுராசா, ச.வே.பஞ்சாட்சரம், பா.ரத்னசபாபதி ஐயர், ஏ.இக்பால், மு.சடாட்சரன், தா.இராமலிங்கம், மு.பொன்னம்பலம், என்.சண்முகலிங்கன், பேனா.மனோகரன், ஆதவன், வ.ஐ.ச.ஜெயபாலன், எம்.கோவிந்தராஜன், இரா.சுகுணசபேசன், சேரன், டானியல் அன்ரனி, அ.புராந்தகன், சி.குமாரலிங்கம், திருமலை சுந்தா, முருகு, வதிரி சி. ரவீந்திரன், மூதூர் முகைதீன், இரா.நாகராசன், பூநகர் மரியதாஸ், ஜவாத் மரைக்கார், சரவணையூர் சுகந்தன், மற்றும் திக்குவல்லை இனாயாஹ் என நாற்பத்து நான்கு (44) கவிஞர்களின் கவிதைகளோடு 1974 இல் வெளியாகியுள்ளது.
ஈழத்தில் புதுக்கவிதைகளின் தோற்றம் என்பது, தமிழ்நாட்டுக்கு எப்படி ஒரு மகாகவி சுப்பிரமணி பாரதியோ அதுபோல ஈழத்துக்கு மஹாகவி எனும் உரித்திரகுமாரன் அவர்களிடம் இருந்தே தொடங்குகிறது. அறுபதுகளின் துவக்கத்தில் ஈழத்தில் புதுக்கவிதை பல இடையூறுகளுக்கு மத்தியில் மொட்டவிழ்த்துள்ளன.
அறுபதுகளில் இல்லாத அளவுக்கு எழுபதுகளில் புதுக்கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள். இதற்கு "பொறிகள்" தொகுப்பு ஒரு சாட்சி என்றால் அது மிகையாகாது.
வரிகளை மடக்கியும், விடுகதை போட்டும், குறும்பாக எழுதுவதும் புதுக்கவிதையென பலர் நினைப்பதாக "கணையாழி" குறைபட்டுக் கொண்டதாக தொகுப்பாசிரியர் கூறியிருப்பதிலிருந்து சிறப்பான புதுக்கவிஞர்கள் சொற்பமாக இருந்திருப்பதை அறிய முடிகிறது. இந்தத் தொகுப்பின் மூலமாக அக்குறையை நிவர்த்தி செய்திட தொகுப்பாசிரியர் முயன்றிருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகிறது. நிற்க.
இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அடையாளப்படுத்துவதை முனைப்பாகக்  கொண்டு எழுதுகிறார்கள். பிற படைப்பாளர்களை அடையாளப்படுத்த மறந்து விடுகிறார்கள். அன்பு.ஜவகர்சா, அ.யேசுராசா, எம்.ஏ.நுஃமான், முல்லை அமுதன், எஸ்.பொ, அந்தனி ஜீவா, மற்றும் அருணா சுந்தரராசன் போன்றவர்கள் புதிய படைப்பாளர்களையும், சிறந்த படைப்புகளையும் அடையாளப்படுத்துவதில் முழுமூச்சாகக் கொண்டு செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய இளைய தலைமுறை இவர்களிடத்தில் கற்றுக்கொள்ள விடயங்கள் ஏராளம் உள்ளன.
பொறிகள் தொகுப்பில் பலதரப்பட்ட பரிமானங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. முதலாளித்துவம், பிரபுத்துவம், ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் போன்றவற்றைச் சாடி பல கவிதைகள் தெறிக்கின்றன.
".....
நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ
இவைகளெல்லாம் எமது
உலகைவிட்டுப் போகுமட்டும்
ஓயாது எங்கள்
உழைப்பாளர் போராட்டம்!"
                           - முல்லை வீரக்குட்டி.
"எங்கள்
கரங்களிலிருப்பவை
கதிரறுக்கும்
கூர்வாள்தான் - எனினும்
உதிரத்தை உரமாக்கி
உழைப்போரின் உணர்சிகளை
நிதியாக்கிக் கொழுப்போரின்
சிரமறுக்கும்
என்றும் அறி."
                      -ராதேயன்
"கடுங்குளிரைப் போக்க
எங்களிடம்
கந்தைத்துணி கூடஇல்லை;
உள்ளத்தில் பொங்கியெழும்
உணர்ச்சிகளின் அனலால்தான்
குளிர் காய்கின்றோம்."
                           -நா.லோகேந்திரலிங்கம்
என தோட்டத் தொழிலாளர்களின் வழிகளையும் பதிவு செய்ய மறக்கவில்லை பொறிகள்.
சுயநலவாத அரசியல்வாதிகளையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறது பொறிகள். இதோ,
"சிங்களமே
ஆளும்மொழி
தேசியமொழி
பிரலாபிக்கிறார்
மந்திரியார்.
ஆனால்
அவரின் புதல்வனோ
ஒக்ஸ்போர்டில்.
                - திக்குவல்லை இனாயாஹ். தமிழை மறந்து ஆங்கில மோகத்தில் திரியும் இன்றைய இளைய தலைமுறைக்கும் இக்கவிதை பொருந்தும்.
"தேடி வந்த
தடுப்பூசியை
தடுத்து....
தசையைத் தேடி
வருமேயன்றி
எலும்பை நாடி
வருமா கிருமிகள்....?
என்று
எலும்புடல் கேட்டதும்
ஊசி
தலை குனிந்தது!
                         - அன்பு ஜவகர்சா
விஞ்ஞானத்தையும், ததுவார்ததையும் கலந்து ஒரு உழைப்பாளியின் உடலோடு நிதர்சனமாக படைத்திருக்கிறார். இன்றும் இந்நிலை தொடர்வது நோக்கத்தக்கது.
"ஆயிரம்
அப்ளிக்கேஷன்கள் போட்டு
அவரிடமும் இவரிடமும்
சிபாரிசுக்காக அலைந்து
இறுதியில்....
கைகளை நம்பிக்
களத்தில் இறங்கியபோது...
வெற்றித் திருமகள்
புன்னகை செய்தாள்.
                             - பேனா.மனோகரன்
இக்கவிதையைப் படிக்கையில் வேலையில்லாப் பட்டதாரிகளே என் நினைவில் எழுகிறார்கள். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என மூதறிஞர்கள் சொன்ன இந்த வார்த்தை உண்மையிலும் உண்மைதான்.
[ஐயா அன்பு.ஜவகர்சா அவர்களோடு முகநூல் வழியே சிலமுறை உரையாடியிருக்கிறேன். ஐயா பேனா.மனோகரன் அவர்களோடு ஒருமுறை நேரிலும் பலமுறை முகநூல் வழியேயும் உரையாடியிருக்கிறேன் என்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.]
அறவழிப் போராட்டம் முடிவுற்று ஆயுதப் போராட்டம் முளைவிட்ட காலம் என்பதால் போர் வலிகள் சுமந்து கவிதைகள் இதில் இல்லை.
தெறித்த பொறிகளின் தணல்கள் அணைந்தாலும் அவை கொடுத்த வலிகளும், தடயங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நூல்: பொறிகள் - கூட்டு கவிதைத் தொகுப்பு
தொகுப்பாசிரியர்: அன்பு.ஜவகர்சா
வெளியீடு: குகன் அச்சகம், தெல்லிப்பளை, ஈழம்.



No comments:

Post a Comment